வீடு தேடி குறைந்த விலையில் மணல் வரும்: முதல்வர் உறுதி
வீடு தேடி மலிவு விலையில் மணல் வரும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடக் கூறினார்.
வீடு தேடி மலிவு விலையில் மணல் வரும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடக் கூறினார்.
ஈரோட்டில் ரூ. 692 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும் அவர் பேசியதாவது:
ஈரோடு எப்போதுமே அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வெற்றியை (8 தொகுதிகள்) அதிமுகவுக்கு வழங்கிய ஒரே மாவட்டம் ஈரோடு மட்டும்தான்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையை நினைவுகூரும் வகையில் ஈரோட்டை அடுத்த ஓடாநிலையில் சின்னமலைக்கு மணிமண்டபமும், சேலம் சங்ககிரியில் நினைவுச் சின்னமும் அமைக்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்புக்கு வித்திட்ட காலிங்கராயனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மணி மண்டபம் அமைக்க 2016-இல் ரூ. 1.65 கோடியை ஜெயலலிதா ஒதுக்கீடு செய்தார். இங்கு 6 அடி உயரத்தில் காலிங்கராயனுக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு இந்த ஆண்டு இறுதிக்குள் மணிமண்டபம் திறக்கப்படும்.
முன்னாள் முதல்வர் அண்ணா சில ஆண்டுகள் பெரியாருடன் ஈரோட்டில் தங்கி எழுத்துப் பணியாற்றியுள்ளார். இத்தகைய பழமையும், பெருமையும் மிக்க ஈரோடு நகரம், கட்டமைப்பிலும், சாலை மேம்பாட்டிலும் சிறந்து விளங்க ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் வகையில் ஈரோடு - பெருந்துறை - காங்கயம் சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைப்பதற்காக நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ. 58.54 கோடி நிதியை ஜெயலலிதா ஒதுக்கீடு செய்திருந்தார். இந்த மேம்பாலம் அமைக்கும் பணிக்கு இப்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தங்கள் பகுதிக்கு அருகேயுள்ள அணைகள், குளங்கள், ஏரிகளில் இருந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அனுமதி பெற்று, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.
அதுமட்டுமல்ல, மணல் விலை அதிகரித்துக் கொண்டே சென்றதால், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. இன்னும் ஒரு வார காலத்துக்குள் சீர் செய்யப்பட்டு, குறைந்த விலையிலே பொதுமக்களின் இல்லம் தேடி மணல் வரும். தேவையான அளவுக்கு மணலை அரசு வழங்கும் என்றார்.
விழாவில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பணன், ஈரோடு மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், எம்.எல்.ஏ.வுமான கே.வி.இராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
முதல்வர் கூறிய குட்டிக் கதை
ஒருவன் தன் ஊரை அடைய காட்டு வழியே நடந்து கொண்டிருந்தான். இருட்டிவிட்டது. இருட்டிலே நடந்தால் மிருகங்கள் அடித்துவிடும் என்று நினைத்து மரத்தடியில் உட்கார்ந்தான். அவனைப்போல இன்னொருவன் தனியாக வந்து கொண்டிருந்தான்.
இரண்டு பேரும் எதிர்பாராமல் சந்தித்து நண்பர்களாகி ஒருவருக்கு ஒருவர் துணையாக
காட்டைக் கடந்து விடலாம் என்று நடக்கத் தொடங்கினர். வழியில் எந்த ஆபத்து வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.
சிறிது தூரத்தில் கரடி ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் ஒப்பந்தத்தை மறந்து ஒருவன் ஓடிப்போய் மரத்தில் ஏறிக்கொண்டான். மற்றவனுக்கு மரம் ஏறத் தெரியாது. திடீரென்று கீழே விழுந்து மூச்சை தம் கட்டிக் கொண்டு கிடந்தான். கரடி கீழே கிடந்தவனை முகர்ந்து பார்த்து, இவன் இறந்துவிட்டான் என்று திரும்பியது.
மரத்திலிருந்து இறங்கியவன் கீழே கிடந்தவனிடம் கரடி உன் காதில் ஏதோ கூறியதே, அது என்ன என்று கேட்டான். உன்னை மாதிரி நம்பிக்கை துரோகிகளிடம் இனிமேல் நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கரடி சொன்னதாக கூறினான்.
நெருக்கடி வருகிறபோது உதவிக்கரம் நீட்டுகிறவர்கள்தான் உண்மையான நண்பர்கள். என் நண்பர்களை நான் முழுமையாக நம்புகிறேன். அந்த நம்பிக்கைதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. என்னாலும் என் நண்பர்கள் உயர்வார்கள் என்றார்.