முகப்பு
தமிழ்நாடு

ஆளுநரின் கடித விவரத்தை பேரவையில் தெரிவிக்க மறுப்பு: எதிர்ப்பு தெரிவித்து திமுக வெளிநடப்பு

ஆளுநரிடம் இருந்து பேரவைத் தலைவருக்கு வந்த கடிதத்தை அவையில் படிக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். இதனை ஏற்க பேரவைத் தலைவர் பி.தனபால் மறுத்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:48 PM
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதன்கிழமை வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள்.
பகிர்:

ஆளுநரிடம் இருந்து பேரவைத் தலைவருக்கு வந்த கடிதத்தை அவையில் படிக்கக் கோரி திமுக உறுப்பினர்கள் புதன்கிழமை வலியுறுத்தினர். இதனை ஏற்க பேரவைத் தலைவர் பி.தனபால் மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக பேரவை உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பிரச்னையை எழுப்பினார். அதன் விவரம்:
மு.க.ஸ்டாலின்: ஆளுங்கட்சி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கு கோருகின்ற நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி சேனல் செய்தி வெளியிட்டது. இதுகுறித்து, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தோம். அந்த மனு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகையில் இருந்து செய்தி வெளியீடாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவை விதி 273 -ன் படியும், அரசமைப்புச் சட்ட விதிகளின் கீழும் ஆளுநர் பேரவைக்கு அளிக்கும் தகவல்களை படிக்க வேண்டும். எனவே, ஆளுநரின் கடிதம் தொடர்பான விவரங்களை பேரவையில் படித்து விளக்கிட வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்: ஆளுநரிடம் இருந்து கடிதம் வந்தால் அதை நான், ஆளுநரிடம் இருந்து வரப்பெற்ற அறிவிப்பு என்று சொல்லி படிப்பேன். மசோதா, மானியக் கோரிக்கைகள்தான் அதுபோன்று ஆளுநரிடம் இருந்து வெளிவரும். ஆளுநரின் செயலாளர் அனுப்பிய கடிதத்தைச் சொல்ல வேண்டியதில்லை. அது எனது ஆய்வில் உள்ளது.
(திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பினர்.)
எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்: தலைமைச் செயலாளரையும், உங்களையும் (பேரவைத் தலைவர்) நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார். எனவே, என்ன நடவடிக்கை என்பதை நீங்கள் சொல்லி ஆக வேண்டும். பேரவைதான் அனைத்தையும் விட உயர்ந்தது. எனவே, இந்தப் பேரவையில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
பேரவைத் தலைவர் தனபால்: ஆளுநர் அனுப்பிய கடிதம் எனது ஆய்வில் உள்ளது. தலைமைச் செயலாளரும் எனக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதனை அவைக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆய்வு செய்து ஆளுநருக்கு அனுப்பி வைப்பேன்.
மு.க.ஸ்டாலின்: சட்டப் பேரவை விதி, அரசமைப்புச் சட்ட விதிகளில் ஆளுநரிடம் இருந்து கடிதங்கள் வரப்பெற்றால் அதனை படித்துக் காட்ட வேண்டும் (விதிகளை அப்படியே படித்துக் காட்டினார்). அதன்படி பேரவையில் படிக்க வேண்டும்.
பேரவைத் தலைவர்: மானியக் கோரிக்கை, சட்ட முன்வடிவு போன்றவைதான் பேரவைக்குத் தெரிவிக்கப்படும். அதுதான் எனது கடமை. ஆளுநர் எனக்கு இப்போது கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதனை நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரகசியம் காக்கக் கோரி ஆளுநர் அனுப்பிய கடிதங்களை பேரவையில் படிக்க முடியாது. ஆளுநர் எனக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்; அவைக்கு அல்ல. என்ன நடவடிக்கை என்பதை ஆளுநருக்குத்தான் சொல்ல வேண்டும். அதற்கு முன்பாக பேரவையில் சொல்ல வேண்டுமென ஆளுநர் அறிவுறுத்தவில்லை.
மு.க.ஸ்டாலின்: பிரச்னையை விவாதிக்க வேண்டுமென கேட்கவில்லை. விதிப்படி கடிதத்தை படிக்கக் கேட்கிறோம். அவையில் உள்ள உறுப்பினர்களுக்கு அதனைத் தெரிவிக்க வேண்டும். விதியைப் பின்பற்றாத காரணத்தால் அதைக் கண்டித்து வெளிநடப்புச் செய்கிறோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியதும், திமுக உறுப்பினர்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர். சிறிது நேரத்தில் அவைக்குத் திரும்பி விவாதங்களில் பங்கெடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →