இலங்கை சிறைகளில் இருந்த 85 தமிழக மீனவர்கள் விடுதலை!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 85 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 85 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பிரித்தோ நான்கு நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவிய பதற்றமான சூழலைத் தவிர்க்க, இந்திய மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் இருநாட்டு மீனவர்களை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இலங்கையின் யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திரிகோணமலை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 85 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களை விடுவிக்கும் உத்தரவை மன்னார் நீதிமன்றம் பிறப்பித்தது.
முதலில் யாழ்ப்பாணம் சிறையில் இருந்து 53 பேர் விடுவிக்கப்பட்டனர். பின்னர் வவுனியா சிறையில் இருந்து 24 பேரும் , இறுதியாக திரிகோணமலை சிறையிலிருந்து 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விரைவில் தமிழகம் திரும்ப உள்ளனர்.