தற்கொலை செய்த விவசாயி குடும்பத்துக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்கிய எம்.எல்.ஏ.
சூலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு, தன்னுடைய ஒருமாத ஊதியமான ரூ. 55,000-ஐ சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கனகராஜ் வியாழக்கிழமை வழங்கினார்.
சூலூர் அருகே தற்கொலை செய்து கொண்ட விவசாயியின் குடும்பத்துக்கு, தன்னுடைய ஒருமாத ஊதியமான ரூ. 55,000-ஐ சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கனகராஜ் வியாழக்கிழமை வழங்கினார்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட பச்சார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர், தனது தோட்டத்தில் வறட்சியால் காய்ந்து வரும் தென்னை மரங்களைக் காப்பாற்றுவதற்காக ஆழ்துளைக் கிணறு தோண்டியுள்ளார். ஆனால், ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அவர் மனவேதனையுடன் காணப்பட்டார்.
ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக அவர் கடன் வாங்கியிருந்தாராம். கடனாளியாகிவிட்டோமே என்ற மனக்கவலையுடன் காணப்பட்ட ஆறுமுகம் கடந்த மாதம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், சூலூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஆர்.கனகராஜ், தன்னுடைய ஒருமாத ஊதியமான ரூ. 55,000-ஐ ஆறுமுகத்தின் மனைவி பழனியம்மாளிடம் வியாழக்கிழமை வழங்கினார்.