அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை: தற்கொலை செய்துகொண்ட சுப்ரமணியன் கடிதம்
அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் எழுதிய கடித்தத்தை
நாமக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் எழுதிய கடித்தத்தை அவரது குடும்பத்தினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
நாமக்கல்-மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (58). தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பரான இவர், அரசு ஒப்பந்ததாரராக இருந்தார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணியை சுப்ரமணியம் மேற்கொண்டு வந்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் சமயத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர் வீடுகளில் வருமான வரித் துறை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்ரமணியம் வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றிச் சென்றனர். இதுதொடர்பாக சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் இரு முறை சுப்ரமணியம் விசாரணைக்கு சென்று வந்துள்ளார். 3ஆவது முறையாக சுப்ரமணியம் சென்னை வருமான வரித் துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காகச் செல்ல வேண்டும்.
இந்நிலையில், அவர் கடந்த 8 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள அவரது விவசாயத் தோட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையின்போது, அவரது வயிற்றில் குருணை மருந்து இருந்ததாக தகவல் வெளியாகியது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என காவல் துறையினருக்கு சந்தேகம் எழுந்ததது. இதுதொடர்பாக மோகனூர் காவல் நிலையத்தில் தற்கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, சுப்ரமணியம் இறப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் யார், கடைசியாக அவரிடம் செல்லிடப்பேசியில் பேசிய நபர்கள் யார் என்பது உள்ளிட்ட கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுப்ரமணியம் குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சுப்ரமணியம் இறப்பு வழக்கில் மோகனூர் காவல் ஆய்வாளர் இளங்கோ நியமிக்கப்பட்டு இருந்தார். அவர் புதன்கிழமை மாற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணை அதிகாரியாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமாக உடற்கூறு ஆய்வு அறிக்கை ஒரு வாரத்தில் பெறப்படும். முக்கிய வழக்குகளில் உடனடியாக அறிக்கை பெறப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்படும். சுப்ரமணியம் தற்கொலை செய்துகொண்டு 3 நாள்களாகியும் பரிசோதனை அறிக்கை பெறப்படாமல் உள்ளது. விசாரணை அதிகாரி மாற்றப்பட்டுள்ளதால், இனி விரைந்து உடற்கூறு ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, விசாரணை விரைவுபடுத்தப்படும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், அரசு ஒப்பந்ததாரர் சுப்ரமணியன் தற்கொலை குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரது மனைவி, மகன், மருமகன் ஆகியோரிடம் நாமக்கல் மதுவிலக்கு ஏடிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். முன்னதாக சுப்பிரமணியன் தற்கொலை குறித்து அவரது தோட்ட தொழிலாளர்களிடம் விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இன்லை என்று தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்ததாரர் சுப்ரமணியம், தற்கொலை செய்வதற்கு முன்பு 13 உயர் அதிகாரிகளுக்கு எழுதி வைத்த கடிதம் கிடைத்துள்ளது. அதனை அவரது குடும்பத்தினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் தொழில் போட்டி காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்படுகிறது. மேலும் அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையினரின் சோதனைகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பிஎஸ்கே தென்னரசுக்கு மேல்மட்ட செல்வாக்கும் பணபலமும் உள்ளதாகத் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.