சொத்துக் குவிப்பு வழக்கில் வேதா இல்லம் இடம்பெற்றுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் வாழ்ந்த வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் வாழ்ந்த வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரின் வீட்டை நினைவில்லமாக மாற்றக் கூடாது என்று வலியுறுத்தி, திருச்சியை அடுத்த முசிறியைச் சேர்ந்த பொறியாளர் தங்கவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தொடர்ந்த வழக்கில், வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றக் கூடாது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகள் வேதா இல்லத்தில் நடைபெற்றுள்ளதால், அதனை நினைவில்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், வேதா இல்லம் இடம்பெற்றிருந்ததா? உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஜெயலலிதாவின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வரும் வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.