தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தலை திணிப்பது தேவையற்றது : தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தலை திணிப்பது தேவையற்றது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். குடியாத்தத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தலை திணிப்பது தேவையற்றது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
குடியாத்தத்தில் அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
இன்றைய சூழ்நிலையில் அதிமுக பிளவுபட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஆட்சியில் பாஜக தலையீடு உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தவறு. 18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கத்துக்கும், பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
தமிழக அரசின் நலத் திட்டங்களை மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் நடந்து ஒன்றேகால் ஆண்டு ஆகிறது. மீண்டும் தேர்தலை திணிப்பது தேவையற்றது என கருதுகிறேன். ஆனால் தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க பாஜக தயாராக உள்ளது. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.
நீட் தேர்வை மாணவர்களே ஒப்புக் கொண்ட நிலையில், சிலர் குழப்பிக் கொண்டுள்ளனர் என்றார். இதையொட்டி, நகர பாஜக சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாவட்டத் தலைவர் கொ. வெங்கடேசன், மாவட்டப் பொதுச் செயலாளர்கள் எஸ்.தோன்றல் நாயகன், வாசுதேவன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, நகரத் தலைவர் பி. ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சூரியோதயா தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தூய்மையே சேவை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்சிச்சிக்கு, பள்ளித் தாளாளர் பிலிப்பக்த பிரசன்னா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெனீப்பர் பிலிப் வரவேற்றார். இதில், தமிழிசை சௌந்தரராஜன் உறுதிமொழி வாசிக்க ஆசிரியர்களும், மாணவர்களும் உறுதிமொழியை ஏற்றனர்.
இதைத் தொடர்ந்து, அவர் வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில் உள்ள உத்தர ரங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.