ஓபிஎஸ், மதுசூதனனுக்கு மத்திய பாதுகாப்பு தேவை: உள்துறை அமைச்சரிடம் ஆதரவு எம்.பி.க்கள் கோரிக்கை
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் மதுசூதனன் ஆகியோரின் உயிருக்கு மாநிலத்தில் அச்சுறுத்தல் உள்ளதால் இருவருக்கும் மத்திய படை
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் மதுசூதனன் ஆகியோரின் உயிருக்கு மாநிலத்தில் அச்சுறுத்தல் உள்ளதால் இருவருக்கும் மத்திய படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடுமாறு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் டாக்டர் வா. மைத்ரேயன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் மைத்ரேயன் கூறியதாவது: அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்ட பிறகு வெளியிட்ட செய்திகளை அடுத்து சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர் ஓ.பி.எஸ். கையை வெட்டுவேன் என பேசினார். அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும் பழனிசாமி முதல்வராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் கிரீன்வேஸ் சாலை இல்லத்திலும் போடியில் உள்ள அவரது சட்டப்பேரவை அலுவலகத்திலும் பெரிய அளவில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. கடந்த வாரம் தனது தொகுதிக்கு ஓ.பன்னீர்செல்வம் காரில் சென்ற போது அவரது பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எனவே அவருக்கு மிரட்டல், அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம்.
இது குறித்து மத்திய உளவுத் துறை மூலம் விசாரித்து இருவருக்கும் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றார் மைத்ரேயன்.