முகப்பு
தமிழ்நாடு

இலங்கை ஜெயராஜுக்கு சைவ சித்தாந்த கலாநிதி பட்டம்: தருமை ஆதீனம் வழங்கினார்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் அண்மையில் நடைபெற்ற ஆவணி மூலப் பெருவிழாவில் சமய சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜுக்கு சைவ சித்தாந்த கலாநிதி

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:49 PM
தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற ஆவணி மூலப் பெருவிழாவில் சமய சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜுக்கு சைவ சித்தாந்த கலாநிதி பட்டம் அளித்து, ஆசி வழங்கிய ஆதீன குருமகா சந்நிதானம்
பகிர்:

நாகை மாவட்டம், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் அண்மையில் நடைபெற்ற ஆவணி மூலப் பெருவிழாவில் சமய சொற்பொழிவாளர் இலங்கை ஜெயராஜுக்கு சைவ சித்தாந்த கலாநிதி பட்டத்தை தருமை ஆதீனம் குருமகா சந்நிதானம் வழங்கினார்.
மாணிக்கவாசக நாயனார் மற்றும் வந்தியம்மையின் இறை பக்தியை உலகுக்கு வெளிப்படுத்த திருவிளையாடல் நிகழ்த்திய ஆவணி மூல நாள் விழா, தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டுக்கான விழா 3 நாள் விழாவாக அண்மையில் நடைபெற்றது. முதல் நாள் விழா குருஞானசம்பந்தர் தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா தோத்திர திருநாளாகவும், இரண்டாம் நாள் விழா குருஞானசம்பந்தர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா சாத்திர திருநாளாகவும் கொண்டாடப்பட்டது. 
மூன்றாம் நாள் விழா தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் ஆண்டு விழா மற்றும் புராணத் திருநாளாகவும், ஆவணி மூலப் பெருவிழாவாகவும் கொண்டாடப்பட்டது.
காலை நிகழ்வாக, தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள், சொக்கநாதப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு, சித்தாந்த தெளிவியல் என்ற நூலை வெளியிட்டார். இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 
மாலை நிகழ்வாக, சொக்கநாதப் பெருமான் பூஜை மடத்தில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், தருமையாதீன குருமகா சந்நிதானம், சமய சொற்பொழிவாளர் இலங்கை, கம்பவாரிதி ஜெயராஜுக்கு சைவ சித்தாந்த கலாநிதி என்ற விருதை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், ஆதீன குருமகா சந்நிதானம் ஆசியுரையாற்றி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். விருது பெற்ற இலங்கை ஜெயராஜ் ஏற்புரையாற்றினார். 
தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி முதல்வர் சி. சுவாமிநாதன், தமிழ்த் துறைத் தலைவர் கருணா சேகர், கல்வி நிலையங்களின் செயலாளர் ஆர். சிவபுண்ணியம், கல்விக் குழு உறுப்பினர் இரா. செல்வநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விரிவுரையாளர் ரஜினிகாந்த், மேலாளர் சேதுமாணிக்கம், ஆதீன கண்காணிப்பாளர் மோகன், ஆதீன நிர்வாக அலுவலர்கள் சண்முகசுந்தரம், சோமு ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments