முகப்பு
தமிழ்நாடு

காவலரை தாக்கியவர் அடையாளம் தெரிந்தது: பெங்களூரு விரைந்தது தனிப்படை

சென்னை சேப்பாக்கத்தில் காவலரைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி அடையாளம் தெரிந்தது

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:35 am IST
பகிர்:

சென்னை சேப்பாக்கத்தில் காவலரைத் தாக்கிய வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி அடையாளம் தெரிந்தது. அவரைக் கைது செய்ய சென்னை காவல்துறையின் தனிப்படையினர் பெங்களூரு விரைந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் கடந்த வாரம் நடத்தப்பட்டன. சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு நடத்துவதற்குப் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. 
சேப்பாக்கத்தில் கடந்த 10-ஆம் தேதி போட்டி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மைதானத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போலீஸார் தடியடி நடித்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் சிலர், போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர். போராட்டத்தின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சங்கர் நகர் குற்றப் பிரிவு காவல் நிலைய முதல்நிலைக் காவலர் செந்தில்குமாரைத் தாக்கிய இளைஞர் அடையாளம் காணப்படவில்லை. மாநிலம் முழுவதும் பல்வேறு தமிழ் இயக்கங்களைச் சேர்ந்த இளைஞர்கள் போராட்டத்துக்குத் திரண்டு வந்ததால், அவரை அடையாளம் காணுவதில் போலீஸாருக்கும் குழப்பம் நீடித்தது. இதன் விளைவாக, சம்பந்தப்பட்ட இளைஞரைப் பற்றி தகவலைத் திரட்டும் வகையில் காவலரைத் தாக்கிய அந்த இளைஞரின் புகைப்படத்தை கட்செவி அஞ்சல், முகநூல், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சென்னை காவல்துறை கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது.
இதில் அந்த இளைஞர், எண்ணூர் திலகர் நகர் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் அவரது நண்பர் ஒருவரிடமும், குடும்பத்தினரிடமும் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீஸார், மதன்குமாரைக் கைது செய்ய பெங்களூருவுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். அங்கு போலீஸார், ஓரிரு நாள்களில் மதன்குமாரை கைது செய்வார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.