வங்கிக்கு பூட்டுப் போட்டு சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
லால்குடி அருகே, அதிகாரிகள் வராததால் கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப் போட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து
லால்குடி அருகே, அதிகாரிகள் வராததால் கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப் போட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற சாலை மறியலால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கல்லக்குடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நிர்வாகிகள் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப்.30) நடைபெறுமென அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அந்த வங்கியில் வேட்பு மனு தாக்கல் செய்ய அதிமுகவினரைத் தவிர திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வந்தனர். நீண்ட நேரமாகியும் வங்கி திறக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த லால்குடி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன் தலைமையில் 300 -க்கும் அதிகமானோர் வங்கிக்கு பூட்டுப் போட்டு, கல்லக்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் வங்கியைத் திறக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மறியல் கைவிடப்பட்டது. இதன்காரணமாக, திருச்சி -சிதம்பரம் சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.