திமுக தலைவர் மு. கருணாநிதி காலமானார்: திராவிட இயக்கத்தின் சூரியன் மறைந்தது!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று (07.08.2018) மாலை காலமானார்.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை (07.08.2018) மாலை 6.10 மணியளவில் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 95.
திராவிட இயக்கத் தலைவர்களில் முதுபெரும் தலைவரும், தமிழகத்தின் தன்னிகரில்லாத அரசியல் தலைவரும், தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவருமான முத்தமிழ் அறிஞர் மு. கருணாநிதியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
கடந்த 11 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமாக இருந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
Advertisement
கருணாநிதியின் உடல் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக இரவு 1 மணி வரை வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், சிஐடி காலனி இல்லத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு அதிகாலை 3 மணி வரை அங்கு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
அதன்பின்னர் அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு கருணாநிதியின் உடல் கொண்டு வரப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
கருணாநிதியின் மரணம் குறித்து தகவல்கள் வெளியானதை அடுத்து மருத்துவமனைக்கு ஏராளமான பொதுமக்களும் திமுக தொண்டர்களும் கண்ணீருடன் குவிந்துள்ளனர். தொண்டர்களைக் கட்டுப்படுத்த அதிகப்படியான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.