முகப்பு
தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் ஆய்வு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

Updated On : 2 ஜூன், 2018 at 7:25 PM
பகிர்:


தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் சனிக்கிழமை பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனா். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்பினரும் வலியுறுத்தினர். 

Advertisement

இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சித்தரஞ்சன் மோகன்தாஸ், ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயசந்திரன், மனித உரிமை ஆணைய காவல் கண்காணிப்பாளர் சத்தியபிரியா, மனித உரிமை ஆணைய உதவிப் பதிவாளர் வாசுதேவன் ஆகியோர் கொண்ட குழுவினர், தூத்துக்குடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 

கலவரம் நிகழ்ந்த இடங்கள், கலவரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீ வைத்து எரிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கூடம், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர், ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பு, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களின் வீடுகள், திரேஸ்புரம் பகுதி ஆகியவற்றை அவா்கள் பார்வையிட்டு அங்கிருந்த மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா மற்றும் அதிகாரிகளுடன் மாநில மனித உரிமை ஆணையக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.