முகப்பு
தமிழ்நாடு

நீதித்துறை சார்ந்தவர்களே அதை விமர்சிப்பது தற்கொலைக்குச் சமம்: நீதிபதி கிருபாகரன் வேதனை 

நீதித்துறையை சார்ந்தவர்களே அதை விமர்சிப்பது என்பது நீதித்துறையின் தற்கொலைக்குச் சமம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Updated On : 21 ஜூன், 2018 at 4:37 PM
பகிர்:

சென்னை: நீதித்துறையை சார்ந்தவர்களே அதை விமர்சிப்பது என்பது நீதித்துறையின் தற்கொலைக்குச் சமம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அதிமுகவைச்ச சேர்ந்த 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஒரு தீர்ப்பும் நீதிபதி சுந்தர் மற்றொரு தீர்ப்பும் வழங்கினார்கள். மாறுபட்ட தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துக்களை பலர் தெரிவித்தனர். வன்மையான கண்டனங்களும் எழுப்பட்டது.

குறிப்பாக டிடிவி தினகரன் அணியினைச் சேர்ந்த எம்.எல்.ஏவான தங்க தமிழ்ச்செல்வன் தலைமை நீதிபதி லஞ்சம் பெற்றுக் கொண்டு தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும், மத்திய மற்றும் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் நீதிமன்றம் இருப்பதாகவும் தெரிவித்தார். அத்துடன் மூன்றாவது நீதிபதி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அவர் பேட்டிகளிலும், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் தெரிவித்து வந்தார்.

Advertisement

இதனை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர் உயர் நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் எழுதினர். அத்துடன் வியாழன் அன்று நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் அவர் தனது முறையீட்டினை முன்வைத்தார்.

அப்பொழுது நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

இப்பொழுது நீதித்துறையின் மீதான விமர்சனங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும் மனுதாரர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமல்ல; நீதித்துறையைச் சேர்ந்தவர்களே  நீதிமன்ற தீர்ப்புகளையும் நீதிபதிகளையும் விமர்சிப்பது அதிகமாகி வருகிறது. இவ்வாறு விமர்சிப்பது என்பது நீதித்துறையின் தற்கொலைக்குச் சமம். உங்களது மனுவினை நான் கண்டிப்பாக தலைமை நீதிபதி கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.