18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: 27-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை
18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதிநீக்க வழக்கின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் 27-ஆம் தேதி விசாரிப்பதாக மிஸ்ரா, கவுல் அமர்வு அறிவித்துள்ளது.
டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017, செப்டம்பர் 18-ஆம் தேதி வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ஆம் தேதி வழங்கியது.
இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலாவை நியமனம் செய்து, பதிவுத் துறைக்கு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் கடந்த ஜூன் 18-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களுள் தங்க தமிழ்செல்வனை தவித்து மற்ற 17 சட்டப்பேரவை உறுப்பினர்களும் இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அவசர வழக்காக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மிஸ்ரா, கௌல் அமர்வு வரும் 27-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.