மதுரையில் போலீஸாரை சுட முயன்ற ரௌடிகள் இருவர் சுட்டுக் கொலை
மதுரையில் வியாழக்கிழமை வீட்டில் பதுங்கியிருந்த ரௌடிகளைப் பிடிக்க முயன்ற போலீஸாரைச் சுட முயன்றதால் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்தனர்.
மதுரையில் வியாழக்கிழமை வீட்டில் பதுங்கியிருந்த ரௌடிகளைப் பிடிக்க முயன்ற போலீஸாரைச் சுட முயன்றதால் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவரும் உயிரிழந்தனர்.
மதுரை கீரைத்துறை பகுதியைச் சேர்ந்த திமுக மண்டலத் தலைவர் வி.கே. குருசாமி தரப்பினருக்கும் அதிமுக மண்டலத் தலைவர் ராஜபாண்டி தரப்பினருக்கும் முன்விரோதம் காரணமாக மோதல் இருந்து வருகிறது. இதில் வி.கே. குருசாமி தரப்பில் அவரது மருமகன், ராஜபாண்டி தரப்பில் அவரது மகன் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இருதரப்பிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வி.கே. குருசாமி தரப்பைச் சேர்ந்த சடையாண்டி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, மதுரை காமராஜர்புரம் வைத்தியநாதய்யர் தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் கார்த்திக் என்ற சகுனி கார்த்திக் (29), மதுரை வரிச்சியூர் பொட்டபனையூரை சேர்ந்த இருளாண்டி மகன் மந்திரி என்கிற முத்து இருளாண்டி(28) மற்றும் சிலர், மதுரை ஊரக காவல்துறை அலங்காநல்லூர் காவல்நிலையத்துக்குள்பட்ட சிக்கந்தர் சாவடி மந்தையம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சதி திட்டத்துடன் பதுங்கியிருப்பதாக மாநகரப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் செல்லூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன், சார்பு ஆய்வாளர் பாலமுருகன் உள்பட 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் மந்தையம்மன் கோயில் தெருவுக்கு மாலை 4 மணிக்கு சென்றனர். அங்கு ரௌடி கும்பல் பதுங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது ஆய்வாளர் மணிவண்ணன், சார்பு ஆய்வாளர் முருகன் ஆகியோர் வீட்டுக்கு அருகே சென்றபோது போலீஸாரை பார்த்தவுடன் வீட்டில் இருந்த சிலர் தப்பி ஓடிவிட்டனர். வீட்டில் இருந்த கார்த்திக் (எ) சகுனி கார்த்திக், மந்திரி (எ) முத்து இருளாண்டி ஆகிய இருவரும் வீட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டனர். கதவைத் திறக்குமாறு பலமுறை கூறியும் திறக்கப்படாததால் கதவு மற்றும் ஜன்னல் கதவை உடைத்து ஆய்வாளர் மணிவண்ணன், சார்பு ஆய்வாளர் முருகன் இருவரும் உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் கைத் துப்பாக்கியுடன் இருந்த சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி இருவரும் போலீஸாரை சுட முயன்றனர்.
துப்பாக்கியைக் கீழே போடுமாறும் தாங்கள் கைது செய்யவே வந்திருப்பதாகவும் போலீஸார் எச்சரிக்கை விடுத்தும் இருவரும் துப்பாக்கியைக் கீழே போடாமல் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் காவலர் பாலமுருகனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால் ஆய்வாளர் மணிவண்ணன், சார்பு ஆய்வாளர் முருகன் இருவரும் தற்பாதுகாப்புக்காக ரௌடிகள் இருவரையும் தங்களது கைத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து சகுனி கார்த்திக், முத்து இருளாண்டி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஊரகக்காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சசிமோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் ரௌடிகள் பதுங்கியிருந்த வீட்டில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய போலீஸ் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு வீட்டுக்குள் சோதனை நடத்தப்பட்டது. மேலும் வீட்டில் இருந்து தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதற்காக போலீஸார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த ரௌடிகள் இருவர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எஸ்.பி. மணிவண்ணன் பேட்டி: சம்பவ இடத்தை பார்வையிட்டு ஊரகக்காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
மதுரை நகரில் செல்லூர் காவல்நிலையத்தில் உள்ள வழக்கில் தொடர்புடைய சகுனி கார்த்திக், மந்திரி என்ற முத்து இருளாண்டி இருவரும் சிக்கந்தர் சாவடி பகுதியில் பதுங்கி இருப்பதாக நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளர் மணிவண்ணன், சார்பு ஆய்வாளர் முருகன் உள்பட 6 பேர் கொண்ட தனிப்படையினர், சிக்கந்தர் சாவடியில் மாயக்கண்ணன் என்பவரது வீட்டில் பதுங்கி இருந்தபோது அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
இம்முயற்சியில் காவலர் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் போலீஸாரை சுட முயன்றதால் தற்காப்புக்காக ஆய்வாளர் மணிவண்ணன், சார்பு ஆய்வாளர் முருகன் இருவரும் தங்களிடம் இருந்த கைத் துப்பாக்கியால் ரௌடிகள் இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். வீட்டில் இருந்து எத்தனை பேர், தப்பிச் சென்றது யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சகுனி கார்த்திக் மற்றும் மந்திரி என்கிற முத்து இருளாண்டி உடலை பார்க்க அப்பகுதியில் கூடிய பொதுமக்கள்.