எத்தனை காவலர்கள் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள்?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் எத்தனை காவலர்கள் இன்னும் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் எத்தனை காவலர்கள் இன்னும் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் கடும் மன அழுத்தத்தில் வேலை பார்க்கிறார்கள் என்றும், எனவே அவர்களுக்கு அதனை போக்கும் வகையில் நடவடிகை எடுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இதுதொடர்பாக செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆராய, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், காலர்களுக்கு உரியமுறையில் மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டுமென்றும் கடந்த 02.07.2012 அன்று உத்தவிட்டது.
Advertisement
ஆனால் அது தொடர்பாக பெரிய நட வடிக்கை எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பணியில் இருக்கும் காவலர்கள் தற்கொலை செய்யும் போக்கு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அவர் கூறியாதவது:
காவலர்களுக்கு அவர்களின் உயர் அதிகாரிகளிடம் இருந்து தரப்படும் அழுத்தமே அப்பாவி பொதுமக்கள் மீதான கோபமாக மாறுகிறது. எத்தனை காவலர்கள் இன்னும் உயர் அதிகாரிகளின் வீட்டில் வேலை பார்க்கிறார்கள்? 1979-இல் ஆர்டர்லி முறையினை ஒழித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை என்ன ஆயிற்று?
முன்பு வழங்கப்பட்ட தீர்ப்பின்படி ஆணையம் உருவாக்குவது மற்றும் காவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக வரும் வியாழன் அன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யபட வேண்டும்.
அல்லது உள்துறை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்த நீதிபதி வழக்கினை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.