தமிழக அரசியலின் எதிர்காலத்தையே மாற்றியுள்ள மக்கள்: ஸ்டெர்லைட் ஆலை மூடல் குறித்து கமல்
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் காரணமாக மக்கள் தமிழக அரசியலின் எதிர்காலத்தையே மாற்றியுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் காரணமாக மக்கள் தமிழக அரசியலின் எதிர்காலத்தையே மாற்றியுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வந்த போராட்டத்தின் நூறாவது நாளான கடந்த செவ்வாயன்று துவங்கி போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஸ்டெர்லைட் ஆலைக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, ஆலையின் வாயில் கதவினைப் பூட்டி சீல் வைத்தார்
Advertisement
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் காரணமாக மக்கள் தமிழக அரசியலின் எதிர்காலத்தையே மாற்றியுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது மக்களின் வலிமைக்கு கிடைத்த வெற்றியாகும். மக்களின் வெற்றிக்கு முன்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் சிறியதாகி விடுகின்றன. உயிரிழந்த தியாகிகளுக்கு நமது அஞ்சலியினை செலுத்த வேண்டும்.
தமிழக அரசியலின் எதிர்காலத்தையே மக்கள் மாற்றியுள்ளார்கள். அரசியல்வாதி என்பவனது தேவையே மக்களால் மாற்றியெழுதப்பட்டிருக்கிறது. இதில் இருந்து தேவையான கல்வியை மக்கள் நீதி மய்யம் பெற்றுக் கொள்கிறது. தமிழன் என்பதில் மிகவும் பெருமையாக உள்ளது.
இப்பொழுது நாமே மாற்றமாக உருவாக்கியுள்ளோம். நூறு நாட்களாக நடந்த தூத்துக்குடி மக்களின் போராட்டம் தொடர்பாக தமிழக அரசு உணர்ந்து செயலாற்றி இருந்தால், தேவையற்றதும் துரதிருஷ்டவசமானதுமான உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம்.
தமிழக அரசின் உத்தரவுக்கு எதிரான எந்த விதமான சட்டத் தடைகளும் கவனமாக தடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் நிரந்தரமாக ஆலை மூடப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.