அண்ணா பல்கலை. துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா? பாமக ராமதாஸ் கேள்வி
அரசு விடுமுறை அறிவித்தும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்த வைத்திருப்பதால், அண்ணா
சென்னை: அரசு விடுமுறை அறிவித்தும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்த வைத்திருப்பதால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. தொடர் மழையை காரணமாக கடந்த வியாழக்கிழமை (நவ.22) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. ஆனால். அன்று அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் கட்டாயப்படுத்தி தேர்வு நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டூவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:
மழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை அரசு விடுமுறை அறிவித்தும், அண்ணா பல்கலைக்கழகம் மட்டும் கல்லூரிகளை கட்டாயப்படுத்தி தேர்வு நடத்த வைத்திருக்கிறது. அரசு அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவரா அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்? அரசு மழை விடுமுறை அறிவிக்கும்போதெல்லாம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களும் தங்களது தேர்வுகளை ஒத்திவைப்பது வழக்கம். சமீபத்தில் கூட அண்ணாமலை பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஒத்திவைத்தது. அதேபோல நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவினர் பந்த் நடத்தியபோது அதையொட்டி அந்த மாவட்டத்தில் மட்டும் நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தனது தேர்வுகளை ஒத்திவைத்தது என்பது நினைவிருக்கலாம் என்று கூறியுள்ளார்.