முகப்பு
தமிழ்நாடு

அரசு இசைப் பள்ளிகளில் குறைந்துவரும் மாணவர் சேர்க்கை!: பகுதிநேர வகுப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

தமிழகத்தில் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் நடத்தப்படும் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளின் வகுப்புகளை பகுதி நேரமாக மாற்றி அமைத்தால், சேர்க்கை அதிகரிக்கும் எனவும்

Updated On : 6 செப்டம்பர், 2018 at 1:53 AM
ஸ்ரீரங்கம் அரசு இசைப் பள்ளியில் நாகசுரம் கற்றுக் கொள்ளும் மாணவர்கள்.
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:11 PM

தமிழகத்தில் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் நடத்தப்படும் மாவட்ட அரசு இசைப் பள்ளிகளின் வகுப்புகளை பகுதி நேரமாக மாற்றி அமைத்தால், சேர்க்கை அதிகரிக்கும் எனவும், இதன் மூலம் பலரும் தமிழ் இசைக் கலைகளைக் கற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கலை மற்றும் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாநிலத்தில் இசைப் பள்ளிகள், இசைக் கல்லூரிகள், நுண்கலைக் கல்லூரிகள், கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லுரிகளை கலை பண்பாட்டுத் துறை மூலம் அரசு நடத்தி வருகிறது. 
திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், சீர்காழி, சிவகங்கை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், சேலம், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, விழுப்புரம் என 17 இடங்களில் அரசு இசைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் தவில், நாகசுரம், மிருதங்கம், வயலின், பரதநாட்டியம், தேவாரம், குரலிசை என 7 பிரிவுகளில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு அந்தந்த துறைகளில் நுண்ணுபவம்பெற்ற ஆசிரியர்களால் பயிற்சியளிக்கப்படுகிறது. ஒவ்வொரு படிப்பும் மூன்று ஆண்டுகளைக் கொண்டதாகும்.
முழு நேர வகுப்புகள் : காலை 10 மணி முதல் பிற்பகல் 1, பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை வகுப்புகள் நடைபெறுகின்றன. அதிகளவிலான எண்ணிக்கையில் மாணவர்கள் தொடக்கத்தில் சேர்ந்த நிலையில், தற்போது அரசு இசைப் பள்ளிகளில் சேர்க்கை வெகுவாகக் குறைந்துள்ளது. தவில், நாகசுர படிப்புகளுக்கு தவிர மற்றப் பிரிவுகளில் குறைந்தளவிலேயே மாணவ, மாணவிகள் சேருகின்றனர். 
தவில், நாகசுரம், மிருதங்கம், வயலின், பரதநாட்டியம், குரலிசை என ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்குபவர்கள் பலர் இன்று இசைப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அவர்கள் குறிப்பிட்ட இசைப்பிரிவைத் தேர்ந்தெடுத்து அதை கற்றுக் கொண்டாலும் அதில் அவர்கள் காட்டிய ஆர்வம்தான் அவர்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தி இருக்கிறது. இதை தற்போது படிக்கும் மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் இசைத் துறை மீது பற்றுக் கொண்ட ஆர்வலர்கள்.
தவில், நாகசுரம், வயலின் என எந்த இசையைக் கற்றுக் கொள்பவராக இருந்தாலும் பிறரைச் சார்ந்து வாழ்ந்திடாமல் சுயமாக நின்று வருவாய் ஈட்டக்கூடியஅளவிற்கு படித்து முடித்தவுடனே திறன் பெற்றுவிடுகின்றனர். எனவே இசைக் கலைகள் மீதான ஆர்வத்தை கற்கும் காலத்திலேயே அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் அவர்கள்.
மாதம் ரூ.400 ஊக்க ஊதியம் : இசைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.400 வீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், தவில், நாகசுரம் போன்ற பிரிவுகளில் பயிலும் இறுதியாண்டு மாணவர்கள், அரசு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுப்பப்படுகின்றனர். 
கூடுதல் சேர்க்கைக்கு வழி : முழு நேர வகுப்புகளாக நடத்தப்படுவதால் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து வருவதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், வகுப்புகளை பகுதி நேரமாக மாற்றினால் சேர்க்கை எண்ணிக்கை அதிகமாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர் சமூகஆர்வலர்கள்.
கல்லூரிகளில் பிற படிப்புகளைப் பயின்று, இசை மீதான ஆர்வம் கொண்ட மாணவ, மாணவிகள், இல்லத்தரசிகள் என பலரும் அவரவர் விருப்பத்துக்கேற்ப இசைக்கலைகளைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு தற்போது இல்லை. கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தவில், நாகசுரம், மிருதங்கம், வயலின், குரலிசை போன்றவற்றையும், வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் மிருதங்கம், வயலின், குரலிசை, தேவாரம் போன்றவற்றையும் கற்றுக் கொள்வதற்கு பகுதி நேர வகுப்புகள் நடத்தினால், அது அவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும்.
பிற்பகலில் வகுப்புகள் நடைபெறும் போது, அது அவர்களின் கற்றலுக்குத் தடையாக இருக்காது. இசைக் கலைகளை உயிரோட்டத்துடன்வைத்திருக்க அரசு ஏற்கெனவே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், நெடுநாளாக வைக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கையையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கலைகளையும், பண்பாட்டையும் உயிரோட்டத்துடன் வைக்க அரசு இக்கோரிக்கையை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.