சட்டென மாறியது வானிலை: தமிழகத்தில் பரவலாக மழை!
சென்னையில் சனிக்கிழமை காலை வழக்கமான பனிமூட்டமாக விடியவில்லை. மாறாக லேசான தூறலுடன் ஜம்மென்று இருந்தது.
சென்னை: சென்னையில் சனிக்கிழமை காலை வழக்கமான பனிமூட்டமாக விடியவில்லை. மாறாக லேசான தூறலுடன் ஜம்மென்று இருந்தது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
சென்னையை அடுத்த திருத்தணி, நல்லாட்டூர், திருவாலாங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மதுரையில் நேற்று இரவு தொடர்ந்து கனமழை பெய்தது. திருவாரூர் பகுதிகளில் கனமழை பெய்தது.
புதுச்சேரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது
குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (டிச. 7) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், பனிக்காற்று மறைந்து தூறல் போட ஆரம்பித்தது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது: குமரிக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் சனிக்கிழமை (டிச. 7) மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றாா் அவா்.