ஜெயலலிதா பிறந்தநாள்: 50 ஆயிரம் பேருக்கு மருத்துவப் பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்டு வரும் சிறப்பு மருத்துவ முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக சுகாதாரத் துறை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்டு வரும் சிறப்பு மருத்துவ முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவைப் போற்றும் வகையில் அவரது பிறந்த நாளில் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 710 சிறப்பு முகாம்களும், 710 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்களும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 24) தொடங்கிய இந்த மருத்துவ முகாம்கள் மார்ச் 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. பிப்.24-ஆம் தேதி நடைபெற்ற முகாம்களில் இருதயம், சிறுநீரகம், நரம்பியல் உள்ளிட்ட துறைகளின் கீழ் மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. அதில், மலைவாழ் மக்கள் உள்பட 41,634 பேர் பயனடைந்துள்ளனர்.
இதேபோன்று 42 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் மூலம் 4,920 கர்ப்பிணிகளுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், ரத்தம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த மருத்துவ முகாம்களில் பிறவி குறைபாடுகள், புற்றுநோய் பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நலன், கண், காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளுக்கான சிகிச்சை, தோல், பல், கண் பரிசோதனை, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவ சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று அதில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.