வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனே இரண்டாவது முறையாக பிரதமர் பதவி: மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து
முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து..
சென்னை: முதன்முறை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்று மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று வரும் 26-ஆம் தேதி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எனது இதயங்கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
2014-ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக தாங்கள் பதவியேற்ற போது, ‘இந்தியாவிலுள்ள ஒவ்வொருவரின் முன்னே ற்றத்திற்காக உங்கள் ஒவ்வொருவருடனும் எப்போதும் இருப்பேன்” என்று உறுதியளித்து இருந்தீர்கள். அந்த வாக்குறுதியை நிறைவேற்றியதன் பயனாகவே இப்போது இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக தங்களை நாட்டு மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.
அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களுக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். உங்கள் தலைமையில் வளமான, வலிமையான நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அனைத்து முயற்சிகளிலும் நீங்கள் வெற்றி பெற எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.