பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் சந்தித்துப் பேச உள்ளனர். இவர்களது வருகையை முன்னிட்டு, 11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்காரணமாக போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் குறித்து பெருநகர போக்குவரத்துக் காவல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"11.10.2019 மற்றும் 12.10.2019 ஆகிய தேதிகளில் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது, ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் முன்னேற்பாடு செய்து தங்கள் பயணத்திட்டங்களையும், வழித்தடங்களையும் அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11.10.2019 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் 12.10.2019 அன்று காலை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும் மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலை வழி பயணத்தின் போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைபடுத்தப்படும்.
தேசிய விருந்தினராக சென்னைக்கு வருகை புரியும் மிக முக்கிய பிரமுகரின் இந்தியப்பயணம் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் அமைந்திட பொதுமக்கள் காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.