கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனிமொழி வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தொடர்ந்த வழக்கில் கனிமொழி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட்டனர்.
அதில், கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் இருந்ததாகவும், எனவே, அவர் பெற்ற வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை மேலும் 2 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.