முகப்பு
தமிழ்நாடு

அரசியல் லாபத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாட வேண்டாம்: ஸ்டாலின்

அரசியல் லாபத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

அரசியல் லாபத்திற்காக கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், வெறும் கையைத் தட்டி, விளக்கேற்றி, மணி அடித்து, கரோனாவை விரட்டி விடலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. பேட்டி கொடுத்தே, அதில் தவறான செய்திகளைப் பேசி அரசியல் செய்தே, கரோனாவை ஒழித்துவிடலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. இவை இரண்டுக்கும் மத்தியில்தான் மக்களின் வாழ்க்கை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து துறைச் செயலாளர், துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், அது போதாதென்று மற்றொரு அமைச்சர் ஆகியோரின் கரோனா குறித்த பேட்டிகளுக்குப் பிறகு, அடுத்து “கிளைமேக்ஸ்” காட்சி போல, நேற்றைய தினம் (16.4.2020), தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கரோனாவை ஒழித்துவிட்டதாக தனக்குத் தானே முதுகில் தட்டி முறுவலித்துக் கொள்கிறார்.

'இன்னும் இரண்டு மூன்று நாளில் கரோனாவே இருக்காது' என்று ஆரூடம் சொல்லி இருக்கிறார். இதற்கு இவர் காட்டிய புள்ளிவிவரத்தைப் பார்க்கும் போது, இவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றித் திசைதிருப்புகிறாரா, அல்லது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.

ரேப்பிட் டெஸ்ட் பரிசோதனைக் கருவிகள் ஏப்ரல் 9-ம் தேதி வந்துவிடும் என்றார், 10-ம் தேதியே ஒரு லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்துவிடுவோம் என்றார். அப்படி எந்த பரிசோதனையும் நடக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து 13 ஆயிரம் கோடி பணம் கேட்டார். வந்ததோ வெறும் 800 கோடி. ஆனால் மத்திய அரசிடம் இருந்து பணம் பெற முடிய இல்லை. இதை மறைக்க, 'தி.மு.க. எம்.பி.,க்கள்தானே வாதாடி வாங்கித்தர வேண்டும்? மத்திய அரசை வற்புறுத்தினார்களா? ஏதாவது ஸ்டெப் எடுத்தார்களா?" என்று வக்கணையாகக் கேட்டுள்ளார் முதல்வர். தமிழக அரசு கேட்ட நிதியைத் தர வேண்டும் என்று மூன்று அறிக்கைகளை நான் வெளியிட்டுள்ளேன். பிரதமர் நடத்திய அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இதனைக் கோரிக்கையாக வைத்து வலியுறுத்தினார்; எழுத்து மூலமாகவும் அனுப்பி வைத்துள்ளார். இதை எல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா? மறைக்கிறாரா?

மீண்டும் முதல்வருக்குச் சொல்வது, அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல!

நோயை மறைக்காதீர்கள்; பொய்க்கணக்குக்கான தவறான புள்ளிவிவரங்களை அள்ளிவீசாதீர்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். உபகரணங்கள், கருவிகளை உடனடியாக வாங்குங்கள். பிழையான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகள் தராதீர்கள். எப்படியாவது மக்களைக் காப்பாற்றுங்கள்.

நோயை மறைப்பது என்பது உங்களை ஏமாற்றிக் கொள்வது மட்டுமல்ல; நாட்டு மக்களை ஏமாற்றுவதுமாகும்.

உங்களது அரசியல் சுயநலத்துக்காகவும், லாபத்திற்காகவும் கோடிக்கணக்கான மக்களின் உயிரோடு தயவுசெய்து விளையாடிவிட  வேண்டாம் என்று திரும்பத் திரும்பக்  கேட்டுக் கொள்கிறேன்.

 'கரோனா என்பது பணக்கார வியாதி, ஏழைகளுக்கு வராது' என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு, கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →