கரோனா பணியில் இறப்போர் குடும்பத்திற்கு அறிவித்த நிதியுதவியை வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
கரோனா தடுப்புப் பணியில் இறக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு அரசு ஏற்கெனவே அறிவித்த நிதியுதவியை வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கரோனா தடுப்புப் பணியில் இறக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு அரசு ஏற்கெனவே அறிவித்த நிதியுதவியை வழங்கிட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “இரவு பகல் 24 மணிநேரமும் இடைவேளையின்றி - தங்களின் உயிரைப் பணயம் வைத்து கரோனா நோய்த் தடுப்புப் பணியில் தியாக உணர்வுடன் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்கள், கரோனா நோய்த் தொற்றால் மரணம் அடைந்தால் 25 லட்சம் ரூபாய் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும்” என்று அ.தி.மு.க. அரசு முடிவு எடுத்திருப்பது சிறிதும் பொருத்தமற்றது என்பதுடன் மிகுந்த கண்டனத்திற்கும் உரியது.
முன்களப் பணியாளர்களுக்கு வாக்குறுதி கொடுத்தவர் முதல்வர். அந்த வாக்குறுதியைத் தவறாமல் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பும் தனக்கே இருக்கிறது என்பதை முதல்வர் நிச்சயம் நினைவில் கொள்ள வேண்டும். மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!
அனாவசியமான - அவசர டெண்டர்களுக்கும் - ஊழல் காரியங்களுக்கும் நிதி ஒதுக்குவதைத் தள்ளிவைத்து விட்டு, கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முன்களப் பணியாளர்களின் மருத்துவச் செலவுக்கான 2 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிதியுதவியை 25 லட்சமாகக் குறைத்து – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த முன்களப் பணியாளர்களின் போற்றி வணங்க வேண்டிய பணியை அரசே மனிதாபிமானமின்றி சிறுமைப் படுத்திவிடக் கூடாது என்றும் - நிர்க்கதியாக நிற்கும் அவர்களின் குடும்பங்களை நட்டாற்றில் தவிக்க விட்டு விடக்கூடாது என்றும் முதல்வர் பழனிசாமியை வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.