வைகுந்தம்: லாரி மீது டெம்போ மோதியதில் ஒரே கிராமத்தைச் சேரந்த 3 பேர் பலி: 7 பேர் காயம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை டெம்போ மோதியதில் டெம்போவில் பயணம் செய்த கூலித்தொழிலாளர்
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை டெம்போ மோதியதில் டெம்போவில் பயணம் செய்த கூலித்தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். டெம்போ ஓட்டுநர் உள்பட கூலித்தொழிலாளர்கள் 7 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், தாரமங்கலம் அருகே உள்ள செலவடை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் ஒன்பது பேர் கோவையில் கட்டிட வேலை செய்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு சொந்த ஊர் திரும்புவதற்காக கோவை அருகே உள்ள நீலாம்பூர் சுங்கச்சாவடி பகுதியில் கோவையிலிருந்து சேலம் செல்லும் டெம்போவில் உதவி கேட்டு ஏறி பயணம் செய்துள்ளனர். டெம்போவை சேலம் அருகே உள்ள கருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சுரேஷ் கெமிக்கல் பவுடர் பாரம் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார். அப்போது சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பேருந்து நிறுத்தம் அருகே டெம்போவிற்கு முன்னாள் அரிசி மூட்டைகள் பாரம் ஏற்றிக் கொண்டு கோவையிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் எதிர்பாரதவிதமாக மோதியுள்ளது.
இதில் டெம்போவில் பயணம் செய்த செலவடை பகுதியைச் சேர்ந்த சின்னு (60), செல்வம் (51) இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்து மற்றொரு கூலித்தொழிலாளி சேகர் (27) உயிரிழந்தார்.
மேலும் கட்டிட கூலித்தொழிலாளர்கள் 6 பேர் டெம்போ ஓட்டுநர் ஒருவர் உள்பட 7 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே கிராமத்தில் மூன்று பேர் சாலைவிபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சங்ககிரி காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.