'தமிழகத்தின் நிதி நிலைமை ஐ.சி.யூவிற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது'
தமிழகத்தின் நிதி நிலைமை ஐ.சி.யூவிற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலைமை ஐ.சி.யூவிற்கு எடுத்துப்போகும் அளவுக்கு மோசமாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 2011-ல் இருந்து கடகடவென உயர்ந்து கொண்டிருக்கும் ரூ.4.56 லட்சம் கோடி கடனும், 2014-ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2019-20 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிலேயே 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையும் மேலும் அதிகமாகி - தமிழகத்தின் நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்பது கவலையளிக்கிறது.
தமிழக நிதிநிலை அறிக்கையில் 12 சதவீதம் – அதாவது 36311 கோடி ரூபாயை வாங்கிய கடன்களுக்காக மட்டும் வட்டி செலுத்துகிறது அ.தி.மு.க. அரசு. கரோனா பேரிடர் காலம் முடிந்த பிறகு தமிழக நிதி நிலைமை இன்னும் கடுமையாகி - ‘ஐ.சி.யூ’-விற்கு எடுத்துப் போகும் சூழல் எழுந்து விட்டது.
கரோனா பேரிடரின் மீளாத் துயரில் ஒவ்வொரு குடும்பமும் மூழ்கியிருப்பதால் - ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 5000 ரூபாய் என்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேரடி நிதியுதவி அளித்து - அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட முன்வர வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.