திருப்பூரில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 300க்கும் மேற்பட்டோர் கைது
தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரியும் திருப்பூரில் திமுகவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர்: தில்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரியும் திருப்பூரில் திமுகவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பெரியார், அண்ணா சிலைகளின் முன்பாக திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.செல்வராஜ் தலைமைவகித்தார்.
திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
இதில், பங்கேற்ற திமுகவினர் கூறியதாவது: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மீது காவல் துறையினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்ட திருத்தங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தொமுச பேரவை துணைச் செயலாளர் டிகேடி மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, சாலைமறியலுக்கு முயன்ற திமுகவினர் 300க்கும் மேற்பட்டோரை திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.