செங்கல்பட்டு உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று அதே இடத்தில் வளிமண்டல சுழற்சியாக நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக,
7.12.2020: செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
08.12.20: தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்
மணியாச்சி(தூத்துக்குடி) 16 செ.மீ மழையும், வைப்பார் 12 செ.மீ மழையும், கடம்பூர் 11 செ.மீ மழையும், கயத்தாறு, சீர்காழி, காரைக்கால், சித்தார் தலா 9 செ.மீ மழையும், தரைஞாயிறு, மயிலாடுதுறை, வாலிநோக்கம், நீடாமங்கலம் தலா 8 செ.மீ மழையும், குடவாசல், மணல்மேடு, பாளையம்கோட்டை தலா 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.