சின்னமனூரில் முதல் போக நெற்பயிர் அறுவடைப் பணிகள் தீவிரம்
தேனி மாவட்டம் சின்னமனூரில் முதல் போக நெற்பயிர் சாகுபடிக்கான அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் சின்னமனூரில் முதல் போக நெற்பயிர் சாகுபடிக்கான அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
முல்லைப் பெரியாறு பாசன நீரால் செப்டம்பர் மாதம் முதல் போக நெற்பயிர் சாகுபடிப் பணிகள் நடைபெற்றன. சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, குச்சனூர் போன்ற பகுதியில் சுமார் 4000 ஏக்கர் பரப்பளவிற்கு நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் 120 நாள்கள் தொடர் பராமரிப்பைத் தொடர்ந்து தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெறத் துவங்கியுள்ளது.
விளைச்சல் அமோகம்: பருவமழை கை கொடுத்ததாலும், முல்லைப் பெரியாற்றிலிருந்து தடையின்றி பாசன நீர் கிடைத்ததாலும், அதோடு கடந்தாண்டியில் ஏற்பட்ட புகையான் நோய் தாக்குதல் இன்றி விளைச்சல் அமோகமாக விளைந்துள்ளது. மேலும், வழக்கமாக ஏக்கருக்கு 45 மூடைகள் கிடைக்கும். ஆனால் இந்தாண்டு 50 மூடைகள் வரையில் கூடுதலாக விளைச்சல் கிடைத்து இருப்பதாக விவசாயிகள் கூறினர்.
குவிண்டால் ரூ.1,050க்கு விற்பனை: 61 கிலோ எடை கொண்ட 1 மூட்டை ரூ.1,050 வரையில் விற்பனையாவதால், வெளியூர் வியாபாரிகள் கொள்முதல் செய்ய குவிந்துள்ளனர். இதனால் சின்னமனூர் பகுதியில் நெல் அறுவடைப்பணியில் ஈடுபடும் இயந்திரங்கள், டிராக்டர்கள், கூலித்தொழிலாளர், கொள்முதல் செய்யும் சரக்கு வாகனங்கள் என அப்பகுதி திருவிழாபோல் காட்சியளிக்கிறது. தற்பாது விவசாயிகள் மிக ஆர்வத்துடன் முதல் போக நெற்பயிரை அறுவடைப்பணிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.