ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு தீர்த்தவாரி
ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நன்னிலம்: ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிறு தீர்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஸ்ரீவாஞ்சியத்தில் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் ஆயுள் விருத்தி ஸ்தலம் என போற்றப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத நிலையில், இக்கோயிலில் எமதர்மராஜா, சித்திரகுப்தன் எழுந்தருளி பக்தர்களுக்கு எமபயம் மற்றும் பைரவ உபாதை நீக்கி வருவதாக ஐதீகம். இக்கோயிலில் கங்காதேவி 999 கலைகளுடன் உறையும் புண்ணிய தீர்த்தமான குப்தகங்கை உள்ளது. இந்தத் தீர்த்தத்தில், கார்த்திகை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று நீராடி சுவாமியை வழிபடுபவர்களுக்கு பாவ விமோசனம் கிடைப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தவாரி சிறப்புடன் நடைபெற்றது. தீர்த்தவாரியினையொட்டி, வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், சிறப்பு அபிஷேக ஆராதனைகளுக்குப் பின்னர் மகா அலங்காரத்தில் தீபாரதனை நடைபெற்று பிரகார வலம் வந்து நடவாகன மண்டபத்தில், வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினார்.
பின்னர் புண்ணியத் தீர்த்தமான குப்தகங்கைக்கு ஸ்ரீஅஸ்திரதேவர் சுவாமி எழுந்தருளி பூஜைகள் நடைபெற்று, தீர்த்தவாரி காலை ஆறு மணிக்கு நடைபெற்றது. தீர்த்தவாரியினையையொட்டி, வழக்கமாக புண்ணியத் தீர்த்தத்தில் நீராடும் பக்தர்கள், கரோனாத் தொற்றின் காரணமாக குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக புண்ணியத் தீர்த்தத்தில் மோட்டார் பொருத்தப்பட்டு, குழாய் மூலம் பக்தர்கள் மீது புண்ணியத் தீர்த்தம் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஷவர் போன்ற அமைப்பில் பக்தர்கள் புனித நீராடி சுவாமியை வழிபட்டு தரிசித்தனர். கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமைச் சிறப்பு தீர்த்தவாரியில், தமிழகத்தின் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு நீராடி, சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோயில் சன்னதியில் நடைபெறும் தேர்கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார்.