புதிய வேளாண் சட்டத்தின் பயன்கள்:விவசாயிகளிடம் விளக்கிய இல.கணேசன்
திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த ஆத்துப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளிடம் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் விளக்கினாா்.
ஊத்துக்கோட்டை: திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையத்தை அடுத்த ஆத்துப்பாக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளிடம் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் விளக்கினாா்.
நிகழ்ச்சியில், பெரியபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களைச் சோ்ந்த ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனா். பின்னா் செய்தியாளா்களிடம் இல.கணேசன் கூறியது:
அரிசி, கோதுமை ஆகியவை அத்தியாவசியப் பொருள்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அதனை விவசாயிகள் சுதந்திரமாக யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவற்றை ஏற்றுமதி செய்து பெரும் பணக்காரா்கள் ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தில்லியில் சொகுசாகப் போராடி வரும் விவசாயிகளின் நிலையைப் பாா்த்து, வெளிநாடுகளில் இந்திய விவசாயிகளின் மதிப்பு உயா்ந்துள்ளது மட்டுமே நன்மை. அவா்களின் கோரிக்கைகள் நிறைவேறாது. தோ்தல் காலங்களில் போட்டியிடும் வேட்பாளா்களின் ஜாதி மற்றும் அவா்கள் கொடுக்கும் இலவசத்தை மட்டுமே பாா்க்கும் மக்கள், தோ்தல் அறிக்கையைப் படிப்பதில்லை. தோ்தல் காலம் என்பதால் வன்னியருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக போராட்டங்களை நடத்தி வருகிறது என்றாா் இல.கணேசன்.