ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வனத்துறையைக் கண்டித்து போராட்டம்
ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வனத்துறையினர் அலட்சியத்தால் காட்டுயானை தாக்கி மீண்டும் ஒரு கூலித்தொழிலாளி பலியானதால் வனத்துறையைக் கண்டித்து மலைக்கிராமத்தினர் பட்டினி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் வனத்துறையினர் அலட்சியத்தால் காட்டுயானை தாக்கி மீண்டும் ஒரு கூலித்தொழிலாளி பலியானதால் வனத்துறையைக் கண்டித்து பட்டினி போராட்டத்தை மலைக்கிராமத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலைக் கிராமம் சின்னமனூர் வனச்சரகத்திற்கு உள்பட்டது. இந்நிலையில், கடந்த வாரம் மணலார் எஸ்டேட் பகுதியில் வேலைக்கு சென்று திரும்பிய அம்மாவாசியை யானை மிதித்துக் கொன்றது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர். ஆனால் வனத்துறையினர் எவ்வித முயற்சியும் எடுக்காத நிலையில் அதே பகுதியிலேயே யானை உலாவி வந்துள்ளது.
இந்நிலையில் அதே யானை அருகேயுள்ள மேல் மணலார் கிராமத்தில் மற்றொரு கூலித்தொழிலாளி முத்தையா வை அவரது வீட்டு வாசலிலே கொன்றுவிட்டது. குடியிருப்பு பகுதிகளில் உலாவும் யானை வனப்பகுதிக்கு விரட்டி அடிக்க பல முறை வலியுறுத்தியும், சின்னமனூர் வனத்துறையினர் அலட்சியமே 2 ஆவது உயிர்ப் பலிக்குக் காரணம் எனக் கூறி மணலார் மற்றும் மேல் மணலார் மலைக்கிராமத்தினர் தேயிலைத்தோட்டத்திற்கு வேலைக்குச் செல்லாமல் பணிப்புறக்கனிப்பு செய்தும், வனத்துறையைக் கண்டித்து பட்டனிப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.