முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் மறைவு: அதிமுக இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் மறைவுக்கு அதிமுக இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் பழனிசாமி ஆகியோா் கூட்டாக வெளியிட்ட இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் கடம்பூர் ஜனார்த்தனன் வயது முதிர்வின் காரணமாக மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம்.
பெரியார், அண்ணா, எம்ஜிஆர், அம்மா ஆகியோரின் பேரன்பைப் பெற்றிருந்த ஆரம்பகால கழக உடன்பிறப்பு கடம்பூர் ஜனார்த்தனன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற பொதுச்செயலாளர், தூத்துக்குடி மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் கழகப் பணிகளை ஆற்றி உள்ளார். அதேபோல், திருநெல்வேலி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றி உள்ளதோடு, மத்திய அமைச்சராகவும் சிறந்த முறையில் மக்கள் பணிகளை ஆற்றிய பெருந்தகை.
கடம்பூர் ஜனார்த்தனனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும், இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறவும் எல்லா வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.