தில்லி வன்முறையை கண்டித்து சென்னையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி, சென்னையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அப்போது சிஏஏ ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது இரு மதத்தினருக்கு இடையிலான வன்முறையாக மாறியதால் பெரும் கலவரம் மூண்டது. இதில் ஏராளமான வாகனங்கள், கடைகள், வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.
வன்முறைச் சம்பவங்களில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 42ஆக உயர்ந்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் தில்லி வன்முறையை கண்டித்து சென்னை பவர்ஹவுஸ் அருகே இளைஞர் காங்கிரஸ் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், தில்லி வன்முறைக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் தில்லி வன்முறைக்கு காரணமான கபில் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.