மணப்பாறை ரயில்வே பால சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் இளைஞர் சடலம்
மணப்பாறை ரயில்வே பால சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் இளைஞர் சடலம் மிதந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை ரயில்வே பால சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் இளைஞர் சடலம் மிதந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையின் பிரதான நுழைவு வாயில் பகுதிதான் ரெங்கவிலாஸ். இங்குள்ள இரயில்வே மேம்பாலத்தின் சுரங்கப் பாதையில் மழை பெய்தால் மழை நீர் தேங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து பொதுமக்களின் பயன்பாடு முடங்குவதோடு, துர்நாற்றமும், கொசு தொல்லையும் அப்பகுதியினை சூழ்ந்துகொள்ளும்.
இது நீண்ட நாள் போராட்டமாக அப்பகுதி மக்களுக்கு இருந்து வரும் நிலையில், சனிக்கிழமை மாலை பெய்த மாலையில் வழக்கம்போல் தேங்கி நிற்கும் மழை நீரில் வாலிபர் ஒருவர் உயிரிழந்து மிதப்பதாக காவல்துறையினருக்கு இன்று தகவல் வந்தது. தகவலறிந்து நிகழ்விடத்துக்கு மணப்பாறை காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த வாலிபர் அண்ணாவிநகர் பகுதியில் வசித்து வந்த ஓட்டுநர் ஜாகீர்ஹூசேன் என அடையாளம் காணப்பட்டது.
Advertisement
அப்போது அங்கு வந்த ஜாகீர்ஹூசேன் தாய் மற்றும் சகோதரர் கதறி அழுதனர். சனிக்கிழமை மாலை வீட்டை விட்டுச் சென்ற ஜாகீர்ஹூசேன், இரண்டு நாள்களாக உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று சடலமாக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஜாகீர்ஹூசேன் உடலைக் கண்டு சற்றும் தாமதிக்காமல் தேங்கி நின்ற நீரில் இறங்கிய சகோதரர் ஜாகீர்ஹூசேன் உடலை நீரில் இழுத்து வந்து கரையில் சேர்த்தார்.
பின் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூராய்விற்காக ஜாகீர்ஹூசேன் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உடற்கூராய்விற்கு பின் மாலையில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாலிபரின் உயிரிழப்பிற்குப் பிறகாவது சுரங்கப் பாதையில் தேங்கும் மழை நீரை நிரந்தரமாக அப்புறப்படுத்தும் பணியினை நகராட்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.