கடைகள் இரவு 7 மணி வரை இயங்கலாம்: முதல்வர்
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை பொது முடக்கத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதில் முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் கடைகள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு உணவகங்களில் முன்பு இருந்தது (31.7.2020 வரை) போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
காய்கறி கடைகள், மளிகைக் கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
ஏற்கனவே காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள், தற்போது காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களையும், மின் வணிக நிறுவனங்கள் மூலமாக வழங்க அனுமதிக்கப்படுகிறது.