கரோனா: பசியில் தவிக்கும் வளர்ப்பு யானைகள்
பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முடங்கி தற்போது வாழ வழியின்றி தவிக்கும் ஏராளமானோரில் மதுரையைச் சேர்ந்த ரங்கனும் ஒருவர்.
மதுரை: பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் முடங்கி தற்போது வாழ வழியின்றி தவிக்கும் ஏராளமானோரில் மதுரையைச் சேர்ந்த ரங்கனும் ஒருவர்.
ஆனால், அரைஜான் வயிறுக்கே வழிதேட முடியாமல் உலகமே தவித்துக் கொண்டிருக்கும் போது, தான் வளர்த்து வரும் இரண்டு யானைகளுக்கு உணவு வழங்க வழியில்லாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ரங்கன்.
மதுரையைச் சேர்ந்த ரங்கன் இரண்டு யானைகளை வளர்த்து வருகிறார். கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சி போன்றவற்றுக்கு யானைகளை அழைத்துச் சென்று வருவாய் ஈட்டி வந்த ரங்கனுக்கு பொதுமுடக்கத்தால் வருமானத்துக்கு வழியில்லாமல் போனது. இதனால், யானைகளுக்கு உணவளிக்க பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகிறார் ரங்கன்.
நாங்கள் நான்கு தலைமுறைகளாக வீட்டில் யானைகளை வளர்த்து வருகிறோம், கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சிகளுக்கு யானைகளை அழைத்துச் சென்று வருவாய் ஈட்டிவந்தோம். அந்த வருவாய், யானைகளுக்கு உணவளிக்கப் போதுமானதாக இருந்தது. ஆனால் பொது முடக்கம் காரணமாக வருமானம் இல்லை. எப்படியோ கடந்த நான்கு மாதங்களாக யானைகளுக்கு உணவளித்து வருகிறோம்.
எனவே, இரண்டு யானைகளுக்கும் உணவு வழங்க மாநில அரசு உதவி செய்ய வேண்டும். கேரள மாநில அரசு உதவி வருவதைப் போல இரண்டு யானைகளுக்கும் உணவு பொருள்களை வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.