கரோனா சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் படுக்கைத் தட்டுப்பாடா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
படுக்கைத் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அது குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: சென்னையில் கரோனா சிகிச்சைக்கு படுக்கைத் தட்டுப்பாடு இருப்பதாக முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் குற்றம்சாட்டியிருந்த நிலையில், அது குறித்து தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
முன்னதாக, சென்னையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் படுக்கை வசதிகள் முழுவதும் நிரம்பிவிட்டதாக முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் விடியோ ஒன்று வெளியிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, சென்னையில் மட்டும் அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இருக்கின்றன என்பதை நிரூபிக்க முடியும். நேரடியாக அவர் மருத்துவமனைக்கு வரத் தயாரா? தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனாவுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளன.
பேரிடர் காலத்தில் செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவலைப் பரப்பியுள்ளார். தவறான தகவலைப் பரப்பியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை குற்றச்சாட்டுகள் சொல்லும் முன் சிந்தியுங்கள். வரதராஜன் சொன்னக் குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மையில்லை. எந்த செயலாளரை அவர் தொடர்பு கொண்டார் என்பதை விளக்க வேண்டும். எந்த மருத்துவவமனையில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்ற தெளிவுபடுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதாக பேரிடர் காலத்தில் தவறான தகவலைப் பரப்பியதாக, பெருந்தொற்றுநோய் தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.