கோவை: நுழைவுத்தேர்வு நடத்திய அரசு உதவிபெறும் பள்ளிக்கு சீல்
கோவையில் அரசு உத்தரவை மீறி நுழைவுத் தேர்வு நடத்திய அரசு உதவி பெறும் பள்ளிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை: கோவையில் அரசு உத்தரவை மீறி நுழைவுத் தேர்வு நடத்திய அரசு உதவி பெறும் பள்ளிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோவை டவுன்ஹால் பகுதியில் சி.எஸ்.ஐ. அரசு ஆண்கள் உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கரோனா அச்சம் காரணமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் வசூலிப்பு, பாடப் புத்தகங்கள் வழங்குதல் போன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் மேற்கொள்ளக் கூடாது என்று அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும் கோவை மாவட்டம் முழுவதும் தனியார் பள்ளிகள் அரசு உத்தரவை மீறி மாணவர் சேர்க்கை, சிறப்பு வகுப்புகள், கல்வி கட்டணம் வசூலிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில் டவுன்ஹால் சி.எஸ்.ஐ. ஆண்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணிக்கு புகார் வந்தது.
இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி முதன்மை கல்வி அலுவலர் உஷாவுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அரசு உத்தரவை மீறி செயல்பட்டதாக அந்த பள்ளிக்கு கல்வித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதேபோல அரசு உத்தரவை மீறி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தியது, கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பாக எழுந்த புகார்களை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.