திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் கரோனா குறித்த முழுமையான தகவலைக் கேட்டு, நகராட்சி ஆணையரிடம், அ.ம.மு.க. வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, கூத்தாநல்லூர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நகரச் செயலாளர் டி.எம்.சின்ன அமீன் தலைமையில், அவைத் தலைவர் கே.ஆர்.ஏ.எஸ்.மைதீன், நகர இணைச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன், மாவட்டப் பிரதிநிதி வழக்கறிஞர் பிரபுதாஸ், தலைமை கழகப் பேச்சாளர் அபுதாஹிர் உள்ளிட்டோர், நகராட்சி ஆணையர் ஆர்.லதாவிடம், கோரிக்கை மனுவை வழங்கினர்.
கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,
கூத்தாநல்லூரின் புதிய இறைச்சி அங்காடி திறப்பது குறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நீண்ட ஆண்டுகளாக பயன்பாடில்லாமல் இருக்கும் புதிய பேருந்து நிலையத்தைத் திறக்க வேண்டும். சாலைகளில் மீண்டும் சுற்றித்திரியும் மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கூத்தாநல்லூர் நகரம் மற்றும் கூத்தாநல்லூர் வட்டத்தில் கரோனா தொற்று நோய் இதுவரை மொத்தம் எத்தனை பேருக்கு வந்துள்ளது. எத்தனை பேர் குணமடைந்துள்ளனர். தற்போது எத்தனை பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என்பதை முழுமையாக, தெளிவாக தெரியப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை வலியுறுத்தித் தெரிவித்துள்ளனர்.