முகப்பு
தமிழ்நாடு

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனாவில் இருந்து மீண்ட 80 வயது முதியவர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சையில் இருந்த 80 வயது முதியவர் குணமாகி வீடு திரும்பினார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:49 PM
பகிர்:

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தனிப்பிரிவில் கரோனா சிகிச்சையில் குணமான 80 வயது முதியவரை மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பினர்.

அருப்புக்கோட்டையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் 80 வயது முதியவர் ஒருவர் கரோனா தொற்றுடன்  சிகிச்சைக்கு வந்தார், அவரை தனிப்பிரிவில் வைத்து அந்தமருத்துவமனையின் மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறப்பு சிகிச்சை அளித்து வந்தனர். 

இதனிடையே முதியவருக்கு சிகிச்சை காலம் முடிந்து உரிய பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா தொற்று இல்லையென்பதுவும், அவர் குணமடைந்து விட்டார் என்பதும்  தெரிய வந்தது. இதனடிப்படையில் முதியவர் மருத்துவக் குழுவினரால் வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பப்பட்டார். 

80 வயது முதியவர் என்பதால் தனிக்கவனம் எடுத்து சிகிச்சையளித்ததாகவும், அவர் குணமடைந்தது பொது மக்களிடையே கரோனா குறித்த அச்சத்தைப் போக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும் பொது மக்கள் வரும் முன் காப்போம் எனும் வகையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து, அடிக்கடி கைகளை சோப்பு போட்டுக் கழுவுதல் ஆகிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமெனவும், நோய் எதிர்ப்பு ஆற்றல் தரவல்ல உணவு முறைகளைக் கடைப்பிடிக்கவும் பொது மக்களைக் கேட்டுக் கொள்வதாக மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

உடன் மருந்தாளுநர் மணிசங்கர், செவிலியர்கள்,மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் முதியவரை வாழ்த்தி வழியனுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.