திருப்பூரில் நுண் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். எங்களது குடும்பத் தேவைகளுக்காக நுண் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று மாதத் தவணை முறையில் அசல் மற்றும் வட்டியைச் செலுத்தி வந்தோம்.
இந்த நிலையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக வேலை இல்லாததால் எங்களால் மாதத் தவணைகளைச் சரிவர செலுத்த முடியவில்லை. இதனிடையே, ரிசர்வ் வங்கியும் கடன் தவணைத் தொகைகளைச் செலுத்த ஆகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் வழங்கியுள்ளது.
இந்த காலகட்டத்தில் அபராதத் தொகைகளை வசூலிக்கக்கூடாது என்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஆனால் நுண் நிறுவன ஊழியர்கள் தவணைத் தொகைகளை கட்டக்கோரித் தொடர்ந்து செல்லிடப்பேசிகளில் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும், ஊழியர்களை வீடுகளுக்கு அனுப்பி தவணைத் தொகைகளை உடனடியாக கட்டாவிட்டால் கூடுதல் வட்டியுடன் சேர்த்து உடனடியாகக் கட்ட வேண்டும் என்று மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, பெண்களுக்குத் தொடர்ந்து மிரட்டல் விடுக்கும் நுண் நிதி நிறுவனங்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.