கோவையில் தொடங்கியது கோனியம்மன் கோயில் தேரோட்டம்
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று மதியம் 2 மணிக்கு வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்.
கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டம் இன்று (புதன்கிழமை) மதியம் தொடங்கியது.
கோவை மாநகரின் காவல் தெய்வமாக விளங்கி வரும் கோனியம்மன் கோயில் மாசித் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இத்தேரோட்டத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று திருத்தேர்மீது உப்பு வீசி வழிபாடு மேற்கொள்வர். இந்த ஆண்டுக்கான தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் பிப்ரவரி 25 ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று வந்தன.
தினமும் மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருத்தேரில் எழுந்தருள்வதற்காக கோயிலில் இருந்து அம்மன் புறப்பாடு காலை 5 மணிக்கு நடைபெற்றது. தேர் வடம்பிடித்தல் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்றது.
தேர்நிலையில் இருந்து புறப்பட்டுள்ள தேர், ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பக்கவுண்டர் வீதி மற்றும் ராஜவீதி வழியாக மாலை 6 மணிக்கு நிலையை அடைவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேரின் பின் தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி போன்ற வாகனங்கள் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றிருப்பதால் பாதுகாப்புக்கு 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம், குடிநீர், கழிப்பறை போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.