முகப்பு
தமிழ்நாடு

தஞ்சாவூர் ஜைன கோயிலில் திருட்டு போன 22 சிலைகள் மீட்பு: 4 பேர் கைது

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன பழைமையான 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டு, 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன பழைமையான 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டு, 4 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

தஞ்சாவூர் கரந்தை ஜெயின் தெருவில் ஸ்ரீஆதீஸ்வர சுவாமி என்கிற ஜைன கோயில் உள்ளது. இதில், தலா ஒன்றரை அடி உயர ஆதீஸ்வரர் சிலை, இருபத்தினான்காவது தீர்த்தங்கரர் சிலை, சரசுவதி சிலை, ஜோலமாலினி சிலை, சரவண யாக்சன் சிலை, தலா ஒரு அடி உயரமுடைய பஞ்சமேரு சிலை, மகாவீரர் சிலை, தலா அரை அடி உயர தார்நேத யாஸ்கன் சிலை, பத்மாவதி யாஃஷினி சிலை, நந்தீசுவரர் சிலை, தலா முக்கால் அடி உயர நவகிரக தீர்த்தங்கள் சிலை, நவதேவதை சிலை உள்ளிட்ட சிலைகளை மர்ம நபர்கள் ஜன. 19-ம் தேதி இரவு பின்புறக் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து திருடிச் சென்றனர்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தில் கோயில் அறங்காவலர் அப்பாண்டைராஜன் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், மேற்குக் காவல் நிலைய ஆய்வாளர் ஜி. செங்குட்டுவன், உதவி ஆய்வாளர் ஜி. சுகுமாறன் தலைமையில் 5 தலைமைக் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படையினர் நிகழ்விடத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, மர்ம நபர்கள் சிலைகளைத் திருடி, வேனில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது. 

இதன் அடிப்படையில் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள சுங்கான்திடல் பகுதியைச் சேர்ந்த சைவராஜ் மகன் சரவணன் என்கிற ராஜேஷ் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் மூலம் கரந்தையைச் சேர்ந்த பி. சண்முகராஜன் (45), சுங்கான்திடல் பெரிய தெருவைச் சேர்ந்த பி. ரவி (45), நாகை மாவட்டம், கீழ்வேளூர் பிராதபுரத்தைச் சேர்ந்த வி. விஜயகோபால் (37) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், ராஜேஷ் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன.

திருட்டு போன 48 நாட்களுக்குள் இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →