திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் விருப்பம்: பொருளாளர் பதவியில் இருந்து விலகல்
திமுக பொதுச் செயலாளராக துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட துரைமுருகன் விருப்பம் தெரிவித்து, தான் வகித்து வந்த பொருளாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் குறித்து கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அது குறித்த அறிவிப்பில், கடந்த 15-3-2020 அறிக்கையின் வாயிலாக, தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில், 29-3-2020 ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் பொதுச்செயலாளர் பொறுப்புக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
16-3-2020 கடிதத்தின் வாயிலாக கழகப் பொருளாளர் துரைமுருகன், பொதுச்செயலாளர் பொறுப்பிற்கு போட்டியிட விழைவதாகவும், எனவே, அவர் தமது பொருளாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக என்னிடம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்கிறேன்.
எனவே, 29-3-2020 அன்று நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் ‘பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர்’ பொறுப்புகளுக்கான தேர்வு நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், திமுக பொதுச் செயலாளர் பதவி துரைமுருகனுக்குக் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதே சமயம், திமுக பொருளாளர் பதவிக்கு யார்? யார்? போட்டியிடுவார்கள் என்ற விவரம் விரைவில் தெரியவரும்.