தொழிலாளர்களிடம் வாடகை வசூலிக்கக் கூடாது: தமிழக அரசு
கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலத்தவர்கள் உட்பட தொழிலாளர்களிடம் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில்,
"ஊரடங்கு காரணமாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட ஏழை மக்கள் தற்காலிகமாக தங்குவதற்கும், அவர்களுக்குத் தேவையான உணவுக்கும் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தங்களுடைய மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் திரும்பிய வெளிமாநிலத் தொழிலாளர்களை, அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர்கள்/ஆணையர்கள் சுகாதார நடைமுறைப்படி அவர்களை 14 நாள் கண்காணிப்பில் வைத்து அருகில் உள்ள தங்குமிடத்தில் தங்கவைக்க வேண்டும்.
நிறுவனங்களோ, கடைகளோ அல்லது வணிக நிறுவனமோ எவ்வித பிடித்தமும் இல்லாமல் உரிய தேதியில் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.
வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட எந்தவொரு தொழிலாளர்களிடமும் வீட்டு உரிமையாளர்கள் ஒரு மாதம் வாடகை வசூலிக்கக் கூடாது.
தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு வீட்டு உரிமையாளர்கள் கட்டாயப்படுத்தினால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.