ஊரகப் பகுதிகளில் 50 சதவீதப் பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் இயங்க அனுமதி
திருப்பூர் ஊரகப் பகுதிகளில் 50 சதவீதப் பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் இயங்கலாம் என்று ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் ஊரகப் பகுதிகளில் 50 சதவீதப் பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் திங்கள்கிழமை முதல் இயங்கலாம் என்று ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் 114 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 109 பேர் குணமடைந்துள்ளனர். இதில், தற்போது வரையில் 5 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், கடந்த சனிக்கிழமை நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 2 பேரைத் தவிர மீதம் உள்ள 3 பேர் மே 6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.
திருப்பூர் ஊரகப் பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் இயங்கலாம். அதே போல், 15 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பேரூராட்சி பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளைத் தொடங்கிக் கொள்ளலாம். நகரப் பகுதிகளில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள் மாதிரி ஆடைகள் (சேம்பல்ஸ்) உற்பத்தியை 50 சதவீத பணியாளர்களுடன் தொடங்க உள்ளனர்.
இதுதொடர்பான அரசாணை தற்போது தான் கிடைத்துள்ளது. ஆகவே, திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில், அரசின் வழிகாட்டுதல், விதிமுறைகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 30 கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் 28 நாள்கள் முடிவுற்ற 2 மண்டலங்களை விடுவிப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்.